Thursday 28 July 2016

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி


இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த தமிழ் ஏடாக மலரும் மார்க்சிஸ்ட் முதல் மாத இதழ் இதோ தமிழக வாசகர்களையும் கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் சந்திக்கிறது. இப்படியொரு மாதாந்திர ஏட்டைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
நாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் சர்வதேச அலவிலும் தேசிய அளவிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த அன்றாட நிகழ்ச்சிப் போக்குகள் பற்றிய மார்க்சிய பார்வையை கட்சி அணி களுக்குத் தரவேண்டியுள்ளது. அத்துடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி நமது வர்க்கக் கண்ணோட்டத்தையும் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அந்த நோக்கத்துடன்தான் கட்சியின் மத்தியக் கமிட்டி சார்பில் `தி மார்க்சிஸ்ட்’ என்ற மாத ஏடு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் கட்சித் தலை வர்களின் கட்டுரைகளும், தத்துவார்த்த விளக்கங்களும், மார்க்சியக் கல்விக்கும், அரசியல் தெளிவுக்கும் உதவக்கூடிய முக்கிய சர்வதேசிய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின உரைகளும் குறிப்புகளும் வெளியாகின்றன.
இத்தகைய கட்டுரைகளை தமிழில் தருவதோடு, நாமும் சில பிரச்சனைகளில் கட்டுரைகளும் தயாரித்தளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தமிழில் இந்த மார்க்சிஸ்ட் மாத ஏடு வெளிவருகிறது.
இந்த முதல் இதழில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் மூத்தவரான தோழர் முசாபர் அகமது அவர்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் ஆரம்பகாலத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான தோழர் பி.டி.ரணதிவே எழுதியுள்ள `கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் தத்துவமும்’ உள்ளடக்கிய அருமையானதொரு கட்டுரை பொருத்தமாக இடம் பெறுகிறது. நாடு முழுவதும் முசாபர் அகமதுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில் இக்கட்டுரை வெளியாவது இரட் டிப்பு பொருத்தம்.
தோழர் முசாபர் அவர்கள் எழுதிய “நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” (Myself and the Communist Party of India) என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு, இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த ஆரம்பகால கட்டத்தில் கட்சியை உருவாக்குவதில் ஈடுபட்டவர் என்ற முறையில் பி.டி.ரணதிவே இக்கட்டுரையை வழங்கியுள்ளார்.
முசாபர் அகமதுவின் அரசியல் சிந்தனை வளர்த்தது எப்படி? கடுமையான குடும்பச் சூழலில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகப் பரிணமித்தது எப்படி என்பதை பி.டி.ஆர். அன்றைய இந்திய அரசியல் பின்னணியில் எடுத்துரைக்கிறார்.
1020ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களில் பலரும் காங்கிரஸ் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்திலோ அல்லது கிலாபத் இயக்கத்திலோ பங்கேற்றவர்கள்தான். இவை இரண்டிலுமே பங்கு பெறாத முசாபர் எப்படி கம்யூனிச இயக்கத்திற்கு வந்தார் என்பதை பி.டி.ஆர். விளக்குகிறார்.
ஜனநாயக சிந்தனையும், நாட்டுப்பற்றும் கொண்ட முசாபர் அன்றைய காங்கிரஸ் இயக்கம் முழங்கிய வந்தே மாதரம் பாடலில் இந்து மதக் கடவுளான துர்காதேவியை முன்னிறுத்தியிருந்ததைக் கண்டு காங்கிரசின் சுதந்திர லட்சியம் இந்துமத சார்புத்தன்மையை உடையதாகத்தான் இருக்கும் என்று கருதினார். காங்கிரசின் அந்தப் போக்கு முசாபருக்கு பிடிக்கவில்லை. இதே காலகட்டத்தில் முஸ்லீம் இளைஞர்கள் இயக்கம் முன்பு பிரிட்டிஷாரிடம் இழந்த முஸ்லீம் ராஜ்யத்தை அடைய மீண்டும் முயன்றதையும் முசாபர் பார்த்தார். அதையும் அவர் ஏற்கவில்லை. இந்த இரண்டு போக்குகளையுமே நிராகரித்து மதச்சார்பற்ற ஜனநாயக அரசிய லுக்கு வந்தவர் அவர்.
முசாபர் அவர்கள் வங்கமொழி கலை இலக்கியங்கள் மீதும் கலாச்சாரத்தின் மீதும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராவார். ஆரம்பத்தில் வங்க முஸல்மான் சாகித்ய பரிஷத் என்ற கலை இலக்கிய அமைப்பு ஒன்றையும் உருவாக்கி, நவயுகம் என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். இயல்பாகவே அந்தப் பத்திரிகை தொழிலாளர் பிரச்சனை பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பல பிரச்சனைகளோடு அவரை சந்திக்கவரும் தொழிலாளர்கள் மற்றும் மாலு மிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் வருகிறது. காரல் மார்க்ஸ், லெனின் எழுதிய சில நூல்கள் அவருக்குக் கிடைக்கின்றன. மார்க்சின் இடதுசாரி தீவிரவாதம் இளம் பருவக்கோளாறு என்ற நூலையும் படிக்கிறார். அவை அவருக்குப் புதிய வெளிச்சத்தை தருகின்றன. நாட்டின் முழுமையான விடுதலைக்கு சரியான வழி இதுவே என்ற பார்வையைத் தருகின்றன. இதை வைத்து எப்படி இயக்கத்தைக் கட்டுவது? இது சம்பந்தமாக சர்வதேசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இயக்கத்தை உருவாக்கவும் அவர் மனம் விழைந்தது.
இக்காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாடு நடைபெறுகிறது. அதில் கம்யூனிஸ்டுகள் அடிமைப்பட்டிருந்த கிழக் கிந்திய நாடுகளுக்குச் சென்று அங்கே கம்யூனிச இயக்கம் வளர உதவுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் (குறிப்பாக பிரிட்டனிலிருந்து) இந்தியாவிற்கும் வந்தனர். இந்தியாவின் பம்பாய், கல்கத்தா, சென்னை, லாகூர் ஆகிய நான்கு நகரங் களில் தொடர்பு கொண்டு இயங்கினர். கல்கத்தாவிலிருந்த முசாபர் அகமது, கம்யூனிஸ்ட் அகிலம் மூலமாகவே பம்பாயிலிருந்து செயல்பட்ட எஸ்.ஏ.டாங்கே, காட்டே போன்றவர்களை தெரிந்து கொள்கிறார். இவ்வாறு இந்தியாவில் அப்போது தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருந்த தோழர்களிடையே தொடர்பு ஏற்படுத்தியது.
1921ல் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் எம்.என்.ராய், எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதன் பிறகே கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டிஷ் அரசு தீவிரமாக்குகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, கம்யூனிஸ்டுகளை முடக்குவதற்கு பல சதி வழக்குகளை ஜோடித்தது பிரிட்டிஷ் அரசு. 1922ல் கம்யூனிஸ்டுகள் மீதான முதல் சதி வழக்கு (பெஷாவர் சதிவழக்கு) தொடுக்கப்பட்டது. மாஸ்கோவில் தூரகிழக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெற்று வந்த இளம் முஸ்லீகள் பலர் இந்த வழக்கில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன் பின் முசாபர் அகமது, டாங்கே, நளினி குப்தா, சவுகத் உஸ்மான் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் மீது கான்பூரில் சதிவழக்கு தொடுக்கப்பட்டது. இதை கம்யூனிஸ்டு சதி வழக்கு என்று அறிவித்தனர். மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மன்னரது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தனர் என்று அவர்கள் மீது குற்றஞ் சாட்டிய இந்த வழக்கு இந்திய மக்களிடையே கம்யூனிஸ்ட் லட்சியங்களைப் பிரபலப்படுத்தியது. அப்போது பிரிட்டனின் ஆளும் கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் பலர் இதை எதிர்த்தனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க முயன்றவர்களுக்கு சிறைத் தண்டனையா என்று கண்டித்தனர். அவர்களை விடுதலை செய்யக் கோரினர். நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முசாபரும் இதர தோழர்களும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுகின்றனர்.
விடுதலையான முசாபர் அகமது கணவாணி (மக்கள் குரல்) என்ற பத்திரிகையைத் துவக்கினார். அதிலே கம்யூனிச இயக்கம் பற்றியும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதினார்.
1924 முதல் 1927 வரையிலான மூன்றாண்டு காலத்தில் பல மாநிலங்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி உருவாக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகின. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சுயாட்சியே போதுமென்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தபோது கம்யூனிஸ்டுகள்தாம் முதல் முறையாக இந்தியாவுக்கு பரி பூரண சுதந்திரமே லட்சியம் என்று முழங்குகிறார்கள். காங்கிரசில் இருந்த ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டு பின்னர் அதையே காங்கிரசின் குரலாக ஒலித்தனர்.
இப்படி கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்ததுடன் காங்கிரசுக்குள்ளேயே முற்போக்கான சிந்தனைகள் பிரதிபலித்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பீதியடைந்தனர். கம்யூனிஸ்டுகளை மீண்டும் வேட்டையாடத் துவங்கினார்கள். 1929ல் மீரட் சதி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே நீண்ட வழக்காகப் பதிவு பெற்ற இவ்வழக்கில் முசாபர் உள்ளிட்ட 31 தோழர் களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. முசாபருக்கு ஆயுள் தண்டனை, பிலிப்ஸ் பிராட், பென் பிராட்ஸ், ஹாட்சிஸன் ஆகிய மூன்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகளும் இவ்வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்படி பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணி தலைவர்கள் இந்திய கம்யூனிச இயக்க வளர்ச்சிக்கு உதவியதை முசாபரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதன் மூலம் பி.டி.ஆர் கோடிட்டுக் காட்டுகிறார்.
மீரட் சதி வழக்கில் விதிக்கப்பட் தண்டனையைக் கண்டித்து பிரிட்டனிலும் இயக்கம் வெடித்தது. ஆயுள் தண்டனை உள்பட முன்பு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகள் குறைக்கப்பட்டன. எனினும் தோழர் முசாபர் ஆறரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே 1926ல் விடுதலை செய்யப்பட்டார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் இத்தகைய அடக்கு முறைகள் இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த முன்னோடிகளை ஒரு சிறிதும் கலக்கவில்லை. மாறாக வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தையே தமது கம்யூனிஸ்ட் இயக்கப் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர் கம்யூனிஸ்ட்டுகள்.
தேசிய விடுதலைக்காகப் போராடுகிற இந்திய பூர்ஷ்வாக்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது அவசியம் என்றும், அதே சமயத்தில் கம்யூனிஸ்டுகள் தமது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதும் அவசியம் என்றும் சர்வதேச கம்யூனிச இயக்கம் வழிகாட்டிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் பி.டி.ஆர். நமக்களிக்கிறார். சுதந்திரப் போராட்டம் பற்றிய வர்க்க ரீதியான சரியான மதிப்பீட்டின் அடிப்படையில் இவ்வாறு வழிகாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இயக்கத்துடன் இணைந்ததும், விடுதலைப் போராட்டம் புதுவேகம் பெற்றதும் இறுதியில் 1947ல் இந்தியா விடுதலை பெற்றதும் நமக்கு தெரிந்த வரலாறு.
இந்தப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிற முசாபரின் போராட்ட வாழ்க்கை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சரியான மார்க்சிய-லெனினிய அணுகுமுறையை நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற போராட்டத்திலும் முசாபரின் பங்கு முக்கியமானது.
வலதுசாரி திருத்தல்வாதப் போக்கையும், இடதுசாரி அதிதீவிரப் போக்கையும் எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த முசாபர் அகமது வர்கள் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாவதற்கு முன்னர் நடைபெற்ற தெனாலி சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்த காட்சி மறக்க முடியாதது. உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளத்தின் உறுதி கொஞ்சமும் தளராதவராக 1964ல் உருவான மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். இந்திய மக்களுக்கு ஒரு சரியான பாதையைக் காட்டி வரும் நம் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றினார். 1968ல் அவரது மூச்சு நிற்கும் வரை, கம்யூனிச இயக்கத்தில் அவரது பணி நிற்காமல் தொடர்ந்தது.
முசாபரின் வரலாறு தனிமனிதனின் வரலாறல்ல. இந்திய கம்யூனிச இயக்கத்துடன் – மார்க்சிஸ்ட் கட்சியின் பரிணாமத்துடன் இரணடறக் கலந்து நிற்கும் வரலாறு என்பதை பி.டி.ஆரின் இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஒரு சரியான கொள்கை நிலைக்காக, மக்களின் உண்மையான விடுதலைக்காக சுரண்டலற்ற புதிய சமுதாயத்திற்காக இறுதி வரை போராடிய அந்த மாவீரனின் வரலாறு இன்றைய இளம் தோழர்களுக்கு ஒரு அனுபவ வழிகாட்டியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment